லிஸ்பன்: போர்ச்சுகல் காற்பந்து அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (படம்) வரும் 2025ஆம் ஆண்டுவரை சவூதி அரேபியாவின் அல் நசர் குழு சார்பில் விளையாட இணக்கம் தெரிவித்துள்ளார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் முன்னணிக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் சார்பில் விளையாடி வந்த 37 வயது ரொனால்டோ, அக்குழுவில் தான் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறேன் என்றும் அதன் நிர்வாகி எரிக் டென் ஹேக்மீது தனக்கு மரியாதை இல்லை என்றும் தொலைக்காட்சி நேர்காணலின்போது குமுறியிருந்தார்.
அதனால் கோபமுற்ற யுனைடெட் குழு, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, ரொனால்டோவிற்கு அல் நசர் குறிவைத்துள்ளதாகவும் அவருக்குப் பெரும் விலைகொடுக்க தயாராக உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்நிலையில், அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரொனால்டோ.
"இன்னொரு நாட்டில் புதிய காற்பந்து லீக்கில் விளையாட ஆர்வமாக உள்ளேன். அல் நசர் குழுவின் நோக்கம் என்னைப் பெரிதும் ஈர்த்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.
ரொனால்டோவிற்கான ஊதியம் குறித்து அல் நசர் குழு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. ஆனாலும், ஆண்டுக்கு 177 மில்லியன் பவுண்டிற்கும் (S$287 மி.) அதிகமான தொகையை அவர் பெறுவார் என்று தகவல் கசிந்துள்ளதாக `பிபிசி' செய்தி குறிப்பிட்டுள்ளது.
அது உண்மையெனில், காற்பந்து வரலாற்றில் ஆக அதிக ஊதியம் பெறும் விளையாட்டாளராக ரொனால்டோ திகழ்வார்.
கடந்த ஆண்டு இன்னோர் அரபுக் குழுவான அல் ஹிலால் 305 மி. பவுண்டு விலைகொடுத்து ஒப்பந்தம் செய்ய முயன்றபோதும் ரொனால்டோ அதற்கு உடன்படவில்லை. படம்: ஏஎஃப்பி