கோலாலம்பூரின் புக்கிட் ஜலீல் விளையாட்டரங்கில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் மலேசியாவிற்கு எதிரான ஆட்டத்தில் சமநிலை கண்டாலே போதும், சிங்கப்பூர்க் குழு ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பு வெற்றியாளர் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.
கிண்ணம் வெல்லும் அணியாக எதிர்பார்க்கப்படும் வியட்னாமிற்கு எதிராக நேற்று முன்தினம் சிங்கப்பூர் மோதிய ஆட்டம் 0-0 என்று கோலேதுமின்றிச் சமநிலையில் முடிந்தது.
இதனையடுத்து, மொத்தம் பத்து அணிகள் இரு பிரிவுகளாக மோதும் இப்போட்டித் தொடரில் சிங்கப்பூர் ஏழு புள்ளிகளுடன் `பி' பிரிவில் இரண்டாமிடத்தில் உள்ளது.
அரையிறுதி வாய்ப்பு கைக்கெட்டும் தொலைவில் இருந்தாலும் முக்கிய ஆட்டக்காரரான இல்ஹான் ஃபாண்டி, வியட்னாமிற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்து வெளியேறியது சிங்கப்பூருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், வேறு நல்ல ஆட்டக்காரர்களும் அணியில் இருப்பதால் தங்களால் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார் இல்ஹானின் சகோதரரும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான இர்ஃபான் ஃபாண்டி.
ஆட்டத்தில் வெற்றிபெற விரும்பியதால் இது சிறந்த முடிவன்று என்று கூறிய சிங்கப்பூர் பயிற்றுவிப்பாளர் டக்கயுக்கி நிஷிகயா, ஆயினும் ஒரு புள்ளி கிடைத்தது சாதகமான அம்சமே என்றும் சொன்னார்.
"தனித்தனியாகவும் குழு அளவிலும் வியட்னாம் வலிமை மிக்க அணி. ஆனாலும், நாங்கள் அவர்களைத் திறமையாக எதிர்கொண்டோம்," என்றார் அவர்.
இரு அணிகளும் மோதிய கடைசி 14 போட்டிகளில் சிங்கப்பூர் வென்றதே இல்லை.

