டுரின்: இத்தாலிய காற்பந்து லீக் ஜாம்பவானான யுவெண்டஸ் குழுவுக்கு இவ்வாண்டு ஆரம்பித்த
திலிருந்து சோதனைக் காலம் தொடங்கிவிட்டது.
தற்போது சோதனைக் காலத்தின் உச்சகட்டமாக அதனிடமிருந்து 15 புள்ளிகள் பறிக்கப்பட்டுள்ளன.
போலி கணக்குகளைச் சமர்ப்பித்ததற்காக யுவெண்டசுக்கு எதிராக இத்தாலிய காற்பந்துச் சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
15 புள்ளிகள் இழந்ததை அடுத்து, லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த யுவெண்டஸ் பத்தாவது இடத்துக்குச் சரிந்துவிட்டது.
இதனால் அடுத்த பருவத்தில் அக்குழுவால் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யுவெண்டஸ் குழுவிடமிருந்து ஒன்பது புள்ளிகள் மட்டுமே கழிக்கப்பட வேண்டும் என்று இத்தாலிய அரசு வழக்கறிஞர்கள் முதலில் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் பிறகு 15 புள்ளிகளைக் கழிக்க சங்கம் முடிவெடுத்தது.
இதற்கிடையே, எந்த ஒரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று யுவெண்டஸ் வாதிட்டு வருகிறது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய யுவெண்டஸ் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஆக உயரிய, விலைமதிப்புள்ள காற்பந்து
போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டால், ஏற்கெனவே கடந்த பருவத்தில் 239 மில்லியன் பவுண்டு இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள யுவெண்டசுக்கு அது பேரிடியாக அமைந்துவிடும்.
15 புள்ளிகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாது, யுவெண்டசின் தற்போதைய இயக்குநர் ஃபெடரிக்கோ செருபினிக்கு 16 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
செருபினியின் தடையை எதிர்த்தும் மேல்முறையீடு செய்யப்போவதாக யுவெண்டஸ் தெரிவித்தது.
யுவெண்டசின் முன்னாள்
தலைவர் ஆண்ட்ரிய அக்னேலிக்கும் முன்னாள் தலைமை நிர்வாகி மௌரிசியோ அரிவாபெனிக்கும் இரண்டு ஆண்டுகள் தடையும் முன்னாள் இயக்குநர் ஃபேபியோ பராடிசிக்கு 30 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளன.
பரடிசி தற்போது டோட்டன்ஹம் ஹாட்ஸபர் குழுவில் உள்ளார்.
இந்நிலையில், தண்டனை மற்றும் தடைகளை எதிர்நோக்கிய மேலும் எட்டு குழுக்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இது நியாயமற்றது என்று யுவெண்டஸ் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.

