கேப்டவுன்: இந்திய மகளிர் ஹாக்கி அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணியுடன் நான்கு ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் கேப்டவுனில் கடந்த வியாழக்கிழமை நடந்த மூன்றாவது ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 4-0 எனும் கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
இந்திய அணி தரப்பில் ராணி 2வது நிமிடத்திலும் தீப் கிரேஸ் எக்கா பெனால்டி கார்னர் வாய்ப்பில் 18வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 20வது நிமிடத்திலும் சங்கீதா குமாரி 46வது நிமிடத்திலும் கோல் போட்டுகள்.
இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி முறையே 5-1 மற்றும் 7-0 எனும் கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவைப் புரட்டிப் போட்டது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
அண்மை ஆண்டுகளாக இந்திய மகளிர் ஹாக்கி அணி படிப்படியாக மேம்பட்டு வந்துள்ளது.
மகளிர் ஹாக்கியின் பலம்பொருந்திய அணிகளுக்குக் கடுமையான சவால் விடுக்கும் வகையில் அதன் தரம் உயர்ந்துள்ளது.
உலகக் கிண்ணம், ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற மிக முக்கியமான போட்டிகளில் முத்திரை பதிக்க இந்திய மகளிர் ஹாக்கி அணி இலக்கு கொண்டுள்ளது.