புனே: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் கே.எல்*ர.குல், நடிகை அதியா ஷெட்டியை நேற்று திங்கட்கிழமை 23ஆம் தேதி மணந்துகொண்டார்.
மணப்பெண் அதியா ஷெட்டி, இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல், அதியா இருவரும் 2019ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தனர். இந்நிலையில், அவர்களது திருமணம், மகாராஷ்டிர மாநிலம், கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடந்தேறியது.
தங்களது திருமணம் குறித்த சமூக ஊடகப் பதிவில், "இன்று, எங்களது அன்புக்குரியவர்கள் சூழ்ந்திருக்க, வீட்டிலேயே எங்களது திருமணம் நடைபெற்றது அளவிலா மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது. இதயங்கனித்த நன்றியுடனும் அன்புடனும், எங்களது இந்த இணைந்த பயணத்திற்கு உங்களது நல்லாசிகளை வேண்டுகிறோம்," என்று ராகுல்-அதியா இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இவ்விழாவில் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் இருவரும் மணவிழாவிற்கு வந்திருந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனில் ஷெட்டி, "நான் இப்போது மாமனாராகிவிட்டேன்," என்றார்.
அடுத்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் முடிந்தபிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

