ராஞ்சி: மோசமான பந்துவீச்சே நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று அதன் அணித் தலைவர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
"இந்த ஆடுகளத்தை கணிக்கத் தவறிவிட்டோம். ஆடுகளம் இப்படி இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.
"ஆனால் எங்களைவிட நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது. அதனால்தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. சுழற்பந்து வீச்சு திரும்பிய விதமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
"பந்தடிக்கத் தொடங்கும் வரை இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் கடைசிக் கட்டத்தில் பந்துவீச்சில் மிகவும் மோசமாக செயல்பட்டு, கூடுதலாக 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்துவிட்டோம். அதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
"வாஷிங்டன் சுந்தர் நன்றாக செயல்பட்டார். அவர் நன்றாக பந்தடிக்கிறார், பந்தும் வீசுகிறார். இது அணிக்கு உதவும்," என்றார் பாண்டியா.
ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 177 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், அர்தீப் சிங், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் இந்தியா 21 ஓட்டங்களில் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது 20 ஓவர் போட்டி லக்னோவில் இன்று நடைபெறஉள்ளது.

