அஸ்வின் சுழலில் மளமளவென சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்டுகள்
நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
நாக்பூரில் சென்ற வியாழக்கிழமை தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி பந்தடிக்க முடிவு செய்தது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பிறகு முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 2வது நாள் முடிவில் 114 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 3 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 144 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்றைய மூன்றாவது நாளும் இந்திய வீரர்கள் அதிரடி காட்ட, முதல் இன்னிங்சிற்கு 139.3 ஓவர்களில் 400 ஓட்டங்கள் எடுத்து, 223 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
அதிக ஓட்டங்கள் பின்தங்கி இருந்ததால் நெருக்கடியான சூழலில் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை மளமளவென சரித்தார் இந்தியாவின் அஸ்வின்.
கவாஜா, வார்னர், ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி ஆகியோர் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார்கள். அஸ்வினுக்குக் கிடைத்த ஐந்து விக்கெட்டுகளில் நான்கு எல்பிடபிள்யூ மூலம் கிடைத்தன.
அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 32.3 ஓவர்களில்
91 ஓட்டங்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது.

