மான்செஸ்டர்: தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்படும் என பிரிமியர் லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா கூறியுள்ளார்.
2009-2018ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இபிஎல் தொடரின் நிதி விதிமுறைகளை மீறியதாக சிட்டி குழுமீது சென்ற திங்கட்கிழமையன்று இபிஎல் நிர்வாகக் குழு 100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதுபற்றி கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு கருத்து தெரிவித்த அதன் நிர்வாகி கார்டியோலா, "ஐரோப்பிய கிண்ணத் தொடரில் நடந்தது போலவே இப்போதும் நடக்கிறது.
"ஆனால், அங்கு நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபித்தோம்.
"அதேதான் இப்போதும் நடக்கிறது. எங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பளிக்காமல், பிரிமியர் லீக்கில் உள்ள 19 குழுக்களும் எங்கள்மீது குற்றம் சுமத்துகின்றன.
"நாங்கள் நிரபராதி என்பது கண்டிப்பாக நிரூபிக்கப்படும்," என்றார்.
சிட்டி குழு நிதி விதிமுறைகளை மீறியதாக சென்ற 2020ல் தீர்ப்பளித்த ஐரோப்பிய காற்பந்து நிர்வாகக் குழு, சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது.
பின்னர், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தால் சிட்டி குழு மீதான அந்த தடை ரத்து செய்யப்பட்டது.
சிட்டி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அக்குழுவில் இருந்து தான் விலகுவேன் என்று கார்டியோலா முன்பு கூறியிருந்தார். ஆனால், நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, சிட்டி குழுவில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும் விலகப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

