மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜாவின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் ஹர்த்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியாவின் முகமது ஷமி, முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 81 ஓட்டங்கள் குவித்தார்.
அடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. ஆனால், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிர்ச்சி அளித்தனர்.
இஷான் கிஷன் 3 ஓட்டங்களிலும் விராத் கோஹ்லி 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். ஷுப்மன் கில்லும் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. இதனால், இந்திய அணி 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில் கே.எல்.ராகுல், பாண்டியா இணைந்து விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர். பாண்டியா 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு இணைந்த ரவீந்திர ஜடேஜா, ராகுலுக்கு உறுதுணையாக விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக பந்தடித்தார். இவர்கள் 108 ஓட்டங்கள் குவித்தனர்.
கே.எல்.ராகுல் 75 ஓட்டங்களு
டனும் ரவீந்திர ஜடேஜா 45 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, 39.5 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 13வது அரை
சதமாகும்.
2 விக்கெட்டுகள் வீழ்த்தி, 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது.