லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவுடனான புள்ளி இடைவெளியை மேலும் அதிகரிக்கும் எண்ணத்துடன் இன்று கிறிஸ்டல் பேலஸ் குழுவை எதிர்கொள்கிறது ஆர்சனல்.
இன்று இரவு நடைபெறவுள்ள இந்த இபிஎல் ஆட்டத்தில், ஆர்சனல் வென்றுவிட்டால் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிட்டியுடனான புள்ளிகள் இடைவெளி எட்டாக அதிகரிக்கும். பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆர்சனலின் நிலையை இது மேலும் வலுவாக்கும்.
தனது சொந்த மண்ணில் இன்று பேலசை எதிர்கொள்ளவுள்ள ஆர்சனல், தற்போது ஆறு புள்ளிகள் முன்னிலையில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் பேலசை வீழ்த்திவிட்டால், இபிஎல் பட்டத்தை மீண்டும் வெல்லவேண்டும் என்ற ஆர்சனலின் ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்பாகவே அது பார்க்கப்படுகிறது. ஆர்சனல் கடைசியாக 2004ஆம் ஆண்டில் இப்பட்டத்தை வென்றது.
நடப்பு பருவத்தில் கடைசி ஐந்து இபிஎல் ஆட்டங்களாக தொடர் வெற்றியை பதிவு செய்து வரும் ஆர்சனல், சென்ற வாரம் யூரோப்பா லீக்கில் இருந்து வெளியேறியது.
“இத்தோல்வி அக்குழுவிற்கு சிறந்த படிப்பினையாக இருக்கும்,” என்று முன்னாள் லிவர்பூல் வீரர் ரெட்னேப் சொன்னார்.
ஆர்சனல் சொந்த மண்ணில் பேலசுடன் மோதிய கடைசி நான்கு ஆட்டங்களில் மூன்று சமநிலையாகவும் ஒன்றில் பேலசும் வெற்றி பெற்றிருந்தது.
இவ்வாண்டில் பேலஸ் குழு, இன்னும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை. கடைசி நான்கு ஆட்டங்களில் அக்குழு ஒரு கோல்கூட போடவில்லை என்பதும் பேலஸ் மோசமான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.