ஆக்லாந்து: ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையைச் சாய்த்துள்ளது நியூசிலாந்து. இரு அணிகளும் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
அதில் முதலில் பந்தடித்த நியூசிலாந்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களை எடுத்தது. இலங்கையின் வெற்றி இலக்கு 275 ஓட்டங்களாக இருந்தது.
எனினும், 19.5 ஓவர்களிலேயே எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை. அந்த அணி 76 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இலங்கையின் மூன்று பந்தடிப்பாளர்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஓட்டங்களை எடுத்தனர். ஏஞ்சிலோ மேத்தியூஸ் 18 ஓட்டங்களை எடுத்தார், சாமிக்கா கருணாரத்ன 11 ஓட்டங்களை எடுத்தார், லஹிரு குமாரா 10 ஓட்டங்களை எடுத்தார்.
இலங்கைக்கு முதலில் களமிறங்கிய இரண்டு பந்தடிப்பாளர்களும் முதல் நான்கு ஓவர்களுக்குள்ளேயே வெளியேற்றப்பட்டனர். அதற்குப் பிறகு அணி சரியாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஈராண்டுகளாக ஒருநாள் ஆட்டம் எதிலும் ஆடாதிருந்த ஏஞ்சிலோ மேத்தியூஸ்மீது விழுந்தது.
ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தவர் ஃபி ஏலன். அவர் 51 ஓட்டங்களைக் குவித்தார்.
இத்தொடரின் இரண்டாவது ஆட்டம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மூன்றாவது ஆட்டம் ஹேமில்டன் நகரில் நடைபெறும்.

