நோம்பென்: தென்கிழக்காசிய நாடுகளிலேயே சிங்கப்பூர்தான் மேசைப்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று சிங்கப்பூர் ஆண்கள் அணியினர் மீண்டும் நிரூபித்துவிட்டனர்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆண்கள் மேசைப்பந்து இறுதி ஆட்டத்தில் மலேசியாவுடன் சிங்கப்பூர் அணி பொருதியது.
இதில் சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர், மலேசியாவை 3-0 எனப் பந்தாடி தங்கப் பதக்கத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டது.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில்தான் ஆண்கள் மேசைப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்றிருந்தது.
இம்முறை தங்கம் வென்ற அணியில் கிளேரன்ஸ் சியூ, கோஹன் பாங், ஐசேக் குவேக், பே குன் திங், ஈத்தன் போ ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த ஐவரும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள். இவ்வாறு உள்ளூர் வீரர்களை மட்டுமே கொண்ட மேசைப்பந்து அணி ஆக கடைசியாக 1973ஆம் ஆண்டில் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கம் வென்றது.
அப்போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. அரையிறுதியில் சிங்கப்பூர் அணி கடந்த தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற தாய்லாந்து அணியை 3-0 எனும் புள்ளிக் கணக்கில் ஓரங்கட்டியது.
அதற்கு முன்பு முதல் சுற்று ஆட்டங்களில் அது லாவோஸ், மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய குழுக்களை வீழ்த்தியது.
இம்முறை எப்படியும் தங்கம் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இறுதி ஆட்டத்தில் களமிறங்கிய சிங்கப்பூர் அணி இறுதி ஆட்டத்தின் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று மலேசிய அணியைத் திக்குமுக்காட வைத்தது.
சிங்கப்பூர் அணியில் அங்கம் வகித்த ஐசேக் குவேக்கிற்கு வெறும் 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறு வயதிலும் இறுதி ஆட்டமென்ற பதற்றம் ஏதுமின்றி முனைப்புடன் விளையாடி வெற்றி பெற்றார் குவேக்.
இதற்கிடையே, மகளிர் பிரிவில் சிங்கப்பூர் அணி வெண்கலம் வென்றது.
அரையிறுதியில் தாய்லாந்திடம் 3-0 என சிங்கப்பூர் மகளிர் மேசைப்பந்து அணி தோல்வி அடைந்தது. மற்றோர் அரையிறுதியில் தோற்ற வியட்னாமுக்கும் வெண்கலம் கிடைத்தது.

