மோனலிசா
பொழுதுபோக்கு ஓட்டக் குழுவான 'தாறுமாறு ரன்னர்ஸ்' அண்மையில் தமிழில் தனியிசை குத்துப்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு மே தினத்தன்று வெளியான இந்தப் பாடல் கடந்த ஆண்டு இக்குழுவினர் முன்னெடுத்து நடத்திய இந்திய மாணவர்களின் கல்விக்கான நிதித்திரட்டு முயற்சியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிதி திரட்டு முயற்சியின் மூலம் மொத்தம் $90,000 திரட்டப் பட்டுள்ளது.
'மணிக்கு ஒரு மைல்' என்ற கணக்கில் ஒரு மணி நேரத்திற்குப் 10 பேர் வீதம் மொத்தம் 26 மணி நேரத்தில் 42 கிலோமீட்டர் தொலைவு ஓடி இக்குழுவினர் இந்நிதியைத் திரட்டினர்.
இந்நிதி உதவி தேவைப்படும் மாணவர்களின் உபகாரச் சம்பளங்களுக்கும் கடன் உதவிகளுக்கும் பயன்படுகிறது. தாறுமாறு ரன்னர்ஸ் வெளியிட்டுள்ள பாடலுக்கு இசையமைத்தவர் ஷபீர் மியூசிக் ஆசியா நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு புவனேஸ்வரன் கணேசன், 26,
"ஓட்டங்களில் ஈடுபடுபவர்களை உற்சாகமூட்டும் வகையில் இப்பாடல் அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்காகவே குத்துப்பாடலைத் தேர்ந்தெடுத்தோம். பல்வேறு புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி ஓடுபவர்களின் ஆற்றலுக்கும் சக்திக்கும் ஈடுகொடுக்கும் வகையில் பாடலை உருவாக்கியுள்ளோம்," என்று அவர் கூறினார்.
ஏறத்தாழ ஒரு மாத காலத்தில் உருவான இப்பாடல் இசையமைப்பிற்கான முழு ஆதரவையும் ஷபீர் மியூசிக் ஆசியா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இப்பாடலை இசையமைப்பாளர் புவனேஸ்வரனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பாடகர் குரு அய்யாதுரையும் பாடியுள்ளனர்.
இப்பாடல் வரிகளின் ஒரு பகுதியை எழுதிய உயிரியல் அறிவியலாளரும் சிங்கப்பூர் கலைஞருமான இளவழகன் முருகன், 42, "இக்குழுவைச் சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களின் வழி கவனித்து வந்திருக்கிறேன். உற்சாகமூட்டும் பெயருடன் இயங்கிவரும் இக்குழுவினரின் தனித்துவத்தையும் சமூகப் பணிகளையும் மனதில் வைத்தே இதனை எழுதியுள்ளேன்," என்று கூறினார். இப்பாடலின் பிற பகுதிகளை ஷபீர் மியூசிக் ஆசியாவின் இசைக்குழுவினரே எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் நோக்கில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்களுடைய குழு, கல்விநிதி திரட்டுதல் போன்ற சமூகப் பணிகளிலும் களமிறங்கியிருப்பது பெருமைக்குரிய ஒன்று. அந்த வெற்றியின் ஓராண்டு நிறைவை நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையிலேயே இப்பாடலை வெளியிட்டுள்ளோம்," என்று கூறினார் 'தாறுமாறு ரன்னர்ஸ்' குழுவின் நிறுவனரான வழக்கறிஞர் ரமேஷ் செல்வராஜ், 44.
ஒவ்வொரு வார இறுதியிலும் குழுவாக ஓட்டங்களில் ஈடுபடும் இக்குழு இவ்வாண்டின் இறுதியில் 'கலாசார ஓட்டம்' எனும் புதிய முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. இந்நிகழ்வில் பெண்களும் ஆண்களும் பாரம்பரிய உடையிலேயே ஓட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் திரு ரமேஷ் தெரிவித்தார்.

