நோம்பென்: நூலிழையில் தங்கத்தை நழுவவிட்டபோதும் சிங்கப்பூரின் ‘வூஷு’ தற்காப்புக் கலைஞர்களான ஜோவென் லிம்மும் டே யு சுவானும் நடப்புத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டுகளில் ஏமாற்றம் அளிக்கவில்லை.
ஆடவர்க்கான சாங்குவான் பிரிவில் 9.67 புள்ளிகளைப் பெற்ற லிம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 14 பேர் பங்கேற்ற அப்போட்டியில் கடைசிப் போட்டியாளருக்கு முன்னதாகக் களம் கண்ட இந்தோனீசியாவின் எட்கர் சேவியர் மார்வெலோ சற்று மேம்பட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தி, 9.713 புள்ளிகளுடன் தங்கத்தைத் தன்வயமாக்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஹனோயில் நடந்த போட்டியிலும் 0.001 புள்ளியில் தங்கத்தைப் பறிகொடுத்த 24 வயதான லிம், இம்முறையும் தங்கக் கனவு ஈடேறவில்லை என்பதால் மனமுடைந்து போகவில்லை என்றார்.
முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த டாவ்ஷு-கன்ஷு கலப்புப் பிரிவில் லிம் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
“ஒட்டுமொத்தத்தில், என் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியே. மூன்று சுற்றுகளில் எந்தத் தவறும் செய்யாமலும் புள்ளி குறைக்கப்படாமலும் எனது செயல்பாடு அமைந்தது குறித்து பெருமைகொள்கிறேன்,” என்றார் லிம்.
இவரைப் போலவே, இன்னொரு சிங்கப்பூரரான டேயும் ‘தைஜிகுவான் -தைஜிஜியான்’ பிரிவில் மிகக் குறைந்த புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை இழக்க நேர்ந்தது. டே 19.119 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற, புருணையின் ஹோசியா வோங் 19.189 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
முதன்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற 21 வயதான டே காலை முழுமையாக நீட்டாதது போன்ற சிறு சிறு தவறுகளால் முதலிடத்தைத் தவறவிட்டார்.
“இது மிகவும் நல்ல கற்றல் அனுபவமாக இருந்தது,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவரான டே.
ஒட்டுமொத்தத்தில், சிங்கப்பூரின் ‘வூஷு’ குழு இம்முறை இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றியது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் சிங்கப்பூர்க் குழு கூடுதலாக ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.
போட்டியிடாமலேயே தங்கம்
இதனிடையே, எதிராளி இறுதிப் போட்டியில் பங்கேற்காததால் போட்டி இல்லாமலேயே ‘தனிநபர் ஃபாயில்’ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் சிங்கப்பூர் வாள்வீச்சு வீராங்கனை மேக்சின் வோங்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வோங் தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதன்முறை.
சென்ற ஆண்டு ஹனோயில் நடந்த போட்டிகளில் தங்கம் வென்றிருந்த பிலிப்பீன்சின் சமந்தா கேட்டன்டன், சிங்கப்பூரின் சியூங் கெமெய் உடனான அரையிறுதிப் போட்டியின்போது இருமுறை கீழே விழுந்துவிட்டார். வலியுடன் விளையாடி அரையிறுதியில் வெற்றிபெற்ற அவர், இறுதிப் போட்டியை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார்.