கோல்கத்தா: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகக் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த ஆட்டக்காரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (படம்).
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 13 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான 21 வயதான ஜெய்ஸ்வால்.
2018ஆம் ஆண்டில் இந்தியாவின் கே.எல்.ராகுலும் 2022ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சும் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததே முன்னைய சாதனை.
கோல்கத்தா அணித்தலைவர் நிதீஷ் ராணா வீசிய முதல் ஓவரின் முதலிரு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் ஜெய்ஸ்வால். அந்த ஓவரில் 26 ஓட்டங்களை விளாசி யதன் மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் ஓவரில் ஆக அதிக ஓட்டங்களை எடுத்த ஆட்டக்காரர் எனும் பெருமையையும் இவர் பெற்றார்.
கோல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் இவர் 47 பந்துகளில் 98 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை களத்திலிருந்தார்.
நடப்பு ஐபிஎல் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால் ஒரு சதம், நான்கு அரைசதங்களுடன் 575 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களைச் சேர்த்தது. 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து அந்த இலக்கை எட்டியது ராஜஸ்தான் அணி. இதன்மூலம் அவ்வணி 3ஆம் இடத்திற்கு முன்னேறியது (மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஆட்டத்திற்கு முந்திய நிலவரம்)
சகல் முதலிடம்
முன்னதாக, அதே ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார் ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சகல். இதனையடுத்து, 187 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்திற்கு அவர் முன்னேறினார்.