நோம்பென்: கம்போடியாவில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு அதன் வாள்வீச்சு அணி மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தங்கப் பதக்கத்தை வென்றவர்கள் இருவரும் பதின்மவயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பிரிவின் இறுதிச் சுற்றில் வியட்னாமின் வு தி ஹோங்குடன் மோதினார் சிங்கப்பூரின் 15 வயது எல் கோ.
இறுதிச் சுற்றை 15-10 எனும் புள்ளிக் கணக்கில் கோ கைப்பற்றி தங்கம் வென்றார்.
அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூரின் மற்றொரு வீராங்கனையான கிரியா திகானாவை கோ 12-11 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.
கிரியா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்டவர்.
ஆண்களுக்கான வாள்வீச்சுப் போட்டிக்கான இறுதிச் சுற்றில் பிலிப்பீன்ஸ் ஆட்டக்காரர் சேமுவல் டிரான்குயிலானைச் சந்தித்தார் சிங்கப்பூரின் 17 வயது சாமுவல் ராப்சன்.
இந்த ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரர் ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டம் 15-3 எனும் புள்ளிக் கணக்கில் அவருக்குச் சாதகமாக முடிந்தது.
இதுவரை இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் வாள்வீச்சு அணி ஐந்து தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் வென்றுள்ளது.