சிங்கப்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடந்த வாரம் சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேராவுக்குப் பொன்னான வாரம் என்றே சொல்லலாம்.
திங்கள்கிழமை 200 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிக்கிழமை 100 மீட்டர் ஓட்டத்திலும் வென்று இரண்டு தங்கப்பதக்கங்களுடன் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தார் அவர். மேலும், 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவும் பலித்தது.
சனிக்கிழமை சிங்கப்பூர் திரும்பிய அவர் ஓய்வில் இருக்கிறார். ஒரு வார ஓய்வுக்குப் பின்னர் ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் பயணம் செல்லவிருப்பதாக அவர் கூறினார்.
ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் பெறுவதும் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறுவதும் தமது அடுத்த இலக்குகள் என்று நேற்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் திருவாட்டி சாந்தி கூறினார்.
ஆசிய விளையாட்டுகள் 23 செப்டம்பர் தொடங்கி 8 அக்டோபர் வரை சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெற உள்ளது.

