அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது.
கிண்ணம் ஏந்தும் குழுவை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் குஜராத்தின் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தில் நான்கு முறை வெற்றியாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு வெற்றியாளரான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இம்மாதம் 23ஆம் தேதியன்று ‘பிளே ஆஃப்’ சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இதையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் இடம்பிடித்தது.
இன்றைய இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுவதால் சொந்த மண்ணில் களமிறங்கும் சாதகநிலை குஜராத் அணிக்கு நிச்சயம் இருக்கும்.
இன்று குஜராத் வாகை சூடினால் போட்டியில் அறிமுகமாகியதை அடுத்து, தொடர்ந்து இரண்டு முறை கிண்ணம் ஏந்திய முதல் அணி எனும் பெருமை அதைச் சேரும். இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதாகத் தமக்குத் தெரிந்த ஆகச் சிறந்த ஐந்து பந்தடிப்பாளர்களை இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் சேவாக் தேர்வு செய்துள்ளார்.
“நான் அதிகப்படியான தொடக்க ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன,” என்று சேவாக் தெரிவித்தார்.
ரிங்கு சிங், சிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரை அவர் தேர்வு செய்தார்.