சிங்கப்பூர்: தேசிய விளையாட்டரங்கில் முதல் முறையாக தமது பொறுப்பில் உள்ள சிங்கப்பூர் குழுவை வழிநடத்தி வெற்றிபெற நினைத்த பயிற்றுவிப்பாளர் தக்காயுக்கி நிஷிகாயாவின் மனக்கோட்டை மண்கோட்டையானது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் பாப்புவா நியூகினியுடன், சிங்கப்பூர் குழு 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டவுடன், சிங்கப்பூர் ரசிகர்கள் நிஷிகாயா பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
ஆட்டம் தொடங்குவதற்கு முன் சில மணிநேரம் இருக்கும்போது, இந்த ஆட்டத்துக்கும் இன்று நடைபெறும் சோலமன் தீவுகளுக்கான எதிரான ஆட்டத்துக்குமான அனைத்து டிக்கெட்டுகளும் (55,000) விற்று முடிந்துவிட்டன என்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால், விளையாட்டரங்கத்துக்குள் 4,918 ரசிகர்கள் மூன்று பகுதிகளில் அமர்ந்திருந்தனர். அதிலும் பல இருக்கைகள் காலியாக இருந்தன.
தேசிய குழுவின் தலைவராக விளையாடிய கோல் காப்பாளர் ஹசான் சானி, “நாங்கள் பல வாய்ப்புகளை கோலாக்கத் தவறினோம். ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அடுத்த ஆட்டத்துக்கு முன் குழு இன்னும் மேம்பட வேண்டும்,” என்றார்.
“ரசிகர்களின் அதிருப்தியை என்னால் உணர முடிகிறது. அவர்களை மீண்டும் மகிழ்ச்சிப்படுத்த முயற்சி எடுப்போம்,” என்றார் நிஷிகாயா.
உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் 158வது இடத்திலும் பாப்புவா நியூகினி 159வது இடத்திலும் உள்ளன.