புதுடெல்லி: இவ்வாண்டு நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உச்சநிலைக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்ஜோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ளன.
ஆடவர்க்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் மகளிர்க்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.
இதற்குமுன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மும்முறையே கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. கடைசியாக தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் 2014ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றது.
இவ்வாண்டு அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் இந்திய அணியே தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.