சிங்கப்பூர்: காற்பந்து உலகில் தற்போது பலரது கவனமும் சவூதி தொழில்முறை லீக்கின் மீதே உள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா, இங்கோலோ கான்டே போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் அண்மையில் சவூதி லீக்கில் சேர்ந்தனர்.
எனினும், சவூதி அரேபியாவில் இருந்து 6,800 கிலோமீட்டர் தூரத்தில், புக்கிட் தீமாவில் உள்ள தமது இல்லத்திலிருந்து சவூதி லீக்கின் பாதையை அதன் தலைமை செயலாக்க அதிகாரி கார்லோ நோரா வழிவகுக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.
சிங்கப்பூரில் இருந்த வோர்ல்ட் ரெஸ்ட்லிங் என்டர்டெய்ன்மண்ட் ஆசிய பசிபிக் அலுவலகத்திற்கு முன்னதாக தலைமை தாங்கிய இவர், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தொழில்முறை லீக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பின் உதவி பொதுச் செயலாளராகவும் இருந்தார்.
மே 15ஆம் தேதி சவூதி லீக்கில் நோரா, 55, சேர்ந்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு இவர் அளித்த பிரத்தியேகப் பேட்டியில், உலகின் தலைசிறந்த 10 லீக்குகளில் ஒன்றாக, அல்லது முடிந்தால் தலைசிறந்த 10 லீக்குகளில் ஒன்றாக சவூதி லீக் எழுச்சி அடையும் பெரும் திட்டத்தைப் பற்றி பகிர்ந்தார்.
“இது நீண்டகால உத்தி. பிரசித்திபெற்ற ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதால் மட்டும் இந்த இலக்கை எட்டிவிட முடியாது. சவூதியில் விளையாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.
“ஆசியக் கிண்ணத்தையும் வருங்காலத்தில் பெரிய காற்பந்து நிகழ்வுகளை ஏற்று நடத்துவதன் மூலம் சவூதி ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த உதவ முடியும்.
“ஆசியாவில் அவர்கள் தற்போது கிட்டத்தட்ட உயர்மட்டத்தில் உள்ளனர். ஆனால், உலகளவில் அவர்கள் போட்டியிடுவதே இலக்கு,” என்று நோரா விவரித்தார்.
1976ல் தொடங்கப்பட்ட சவூதி லீக், 2007ல் தொழில்முறை லீக்கானது. அதில் இடம்பெறும் குழுக்களுக்கு அரசாங்கம் நிதி அளிக்கிறது. அதில் அல் ஹிலால் குழுவே ஆக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நியூகாசல் யுனைடெட் குழுவின் உரிமையாளரான சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதி, அல் இட்டிஹாட், அல் அலி, அல் நசர், அல் ஹிலால் ஆகிய குழுக்களில் 75 விழுக்காட்டுப் பங்கை வாங்குவதாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.