கம்போடியாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம், மாற்றத்திற்குத் தூண்டுதலாக அமையும் என்பது சிங்கப்பூர் ஆடவர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கையாக இருந்தது.
ஆனால், ஹாங்ஸோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகிவரும் அணியினர், இப்போதுள்ள நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பயிற்சி செய்வதற்கு முறையான இடம் இல்லாததைச் சுட்டிய அவர்கள், தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார் செய்துகொள்வதற்கான பணிகளைக் குறைகூறினர்.
சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் உள்ள இடத்தில் வாரத்திற்கு மூன்று முறை பயிற்சி செய்த அணியினர், அந்த இடம் சிறியதாக இருப்பதாகவும் அது ஒழுங்காகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் ஒருபுறமிருக்க, உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியினர் 2019ல் வகித்திருந்த 19வது இடத்திலிருந்து 36வது இடத்துக்குச் சரிந்தனர்.
இந்நிலையில், பயிற்சி இடவசதிக்குக் குறைந்தது 2026 வரை தீர்வு இல்லை என்று சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் கூறியது.