ரோம்: இத்தாலிய காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து ரொபேர்ட்டோ மன்சினி விலகியுள்ளார். நான்கு முறை உலகக் கிண்ண வெற்றியாளரான இத்தாலி அணியின் பயிற்றுவிப்பாளராக 2018ல் பொறுப்பேற்றார் மன்சினி, 58.
இந்நிலையில், பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது தமது தனிப்பட்ட முடிவு என்றார் அவர்.
இன்ஸ்டகிராமில் பதிவிட்ட மன்சினி, “கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடன் பயணம் செய்த என் ஆட்டக்காரர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
“2020 ஐரோப்பிய வெற்றியாளராக இத்தாலி திகழ்ந்திருப்பது எப்போதும் எனது இதயத்தில் இருக்கும்,” என்றார்.
2018 அக்டோபருக்கும் 2021 அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக 37 ஆட்டங்களில் இத்தாலி தோற்கவில்லை. ஆடவரின் அனைத்துலகக் காற்பந்தில் இது சாதனையாகக் கருதப்படுகிறது.

