சிங்கப்பூர்: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுகளில் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக ஆசிய விளையாட்டுகளில் மும்முறை தங்கப் பதக்கம் வென்ற உள்ளூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் தெரிவித்தார்.
தமது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.
“எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுக்க முடியாமல் போகும்போது அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதே சமயம் செய்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும். எனது குழுவுக்காக நான் ஆதரவு தருவேன். எனது சக வீரர்கள் பல பதக்கங்களை வெல்வார்கள் என நம்புகிறேன். அதுவும் எனக்குப் பெருமையைத் தரும்,” என்று மரினா பேயில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆசிய பொது விருது டிரைஎத்தலிட் போட்டியில் பங்கெடுத்த 28 வயது ஸ்கூலிங் கூறினார்.
ஹாங்சோவில் நடைபெறும் 50 மீட்டர், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டிக்கும் 100 மீட்டர் எதேச்சைப்பாணி நீச்சல் போட்டிக்கும் ஸ்கூலிங் தகுதி பெற்றார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட பெயர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் கொவிட்-19 கிருமிப் பரவல் விவகாரம் தொடர்பாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
ஹாங்சோ ஆசிய விளையாட்டுகள் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறும்.