ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவு ஹாக்கி போட்டியில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரைப் புரட்டியெடுத்தது.
திங்கட்கிழமை நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் சிங் நான்கு கோல்களையும் மந்தீப் சிங் மூன்று கோல்களையும் போட்டனர்.
இடைவேளையின்போது இந்தியா ஆறு கோல் போட்டு முன்னணி வகித்தது. மந்தீப் இரு கோல்களையும் லலித், குர்ஜந்த், சுமித், விவேக் ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.
ஆட்டம் முழுவதும் இடைவிடாது தாக்குதல் நடத்திய இந்தியக் குழு, மேலும் பத்துக் கோல்கள் போட்டு மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் 16 கோல்களை ஒன்பது பேர் போட்டிருந்தனர்.
இந்த பெரிய வெற்றியின் மூலம் இந்திய ஹாக்கி அணி ஆசிய விளையாட்டுகளில் தனது முத்திரையைப் பதித்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.
‘ஏ’ பிரிவில் இந்தியா அடுத்து நடப்பு வெற்றியாளரான ஜப்பானை செப்டம்பர் 28ஆம் தேதி சந்திக்கிறது. அதனை அடுத்து செப்டம்பர் 30ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பிரிவின் கடைசி ஆட்டத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று இந்தியா, பங்ளாதேஷைச் சந்திக்கும்.