இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, தனிப்பட்ட காரணங்களுக்காக கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு அவசரமாக திரும்பியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளையில், நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்துக்கு இந்திய அணியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை திருவனந்தபுரம் வந்திறங்கினர்.
அதில் கோஹ்லி இடம்பெறமாட்டார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதிப்படுத்தாத நிலையில், அதில் இடம்பெற திங்கட்கிழமை இந்திய அணியினருடன் கோஹ்லி இணைவார் என்று கிரிக்பஸ் எனும் ஊடகத் தகவல் கூறியது.
இந்திய அணியின் தூண்களில் ஒன்றாக கோஹ்லி விளங்குகிறார். நெதர்லாந்து உடனான ஆட்டம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்றபோதிலும், அதில் ஓட்டங்களை எடுக்க கோஹ்லி விரும்புவார். இங்கிலாந்துக்கு எதிராகக் கடைசியாக நடைபெற்ற ஆட்டம், மழை காரணமாக கைவிடப்பட்டது.
“தனிப்பட்ட காரணங்களுக்காக கோஹ்லி மும்பை சென்றதை பிசிசிஐ தரப்பு உறுதிப்படுத்தியது. விரைவில் அவர் அணியினருடன் இணைவார்,” என்று கிரிக்பஸ் மேற்கோள்காட்டியது.
கோஹ்லிக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவசரநிலை என்னவென்பது இன்னும் தெரியவில்லை.
கோஹ்லியும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக ஊடகத் தகவல் கூறுகிறது. அத்தம்பதியின் முதல் குழந்தையான வாமிகாவுக்கு மூன்று வயதாகிறது.