நியூகாசல்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பிரான்சின் பிஎஸ்ஜியை 4-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான நியூகாசல் யுனைடெட்.
பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற்றுள்ள நியூகாசல், இப்போட்டியை சிறந்த முறையில் தொடங்கியிருக்கிறது. முதல் ஆட்டத்தில் இத்தாலியின் ஏசி மிலானுடன் கோலின்றி சமநிலை கண்டது. இப்போது பிஎஸ்ஜியை வென்றுள்ளது.
இவ்விரு குழுக்களையும் வெல்வது சாதாரணமன்று.
மிகெல் அல்மிரோன், டேன் பர்ன், ஷோன் லோங்ஸ்டாஃப், ஃபாபியன் ஷேர் ஆகியோர் நியூகாசலுக்கு கோல் போட்டவர்கள். 3-0 எனும் கோல் எண்ணிக்கையில் நியூகாசல் முன்னணியில் இருந்தபோது லூக்கஸ் ஹர்காண்டஸ் பிஎஸ்ஜிக்கு கோல் போட்டார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நியூகாசல் ‘எஃப்’ பிரிவில் முதலிடத்தை வகிக்கிறது. புதிய உரிமையாளர்கள், நிர்வாகி எடி ஹாவ் ஆகியோரின் தலைமையில் கடந்த ஓராண்டாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து வந்துள்ளது நியூகாசல்.
இப்பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் ஏசி மிலானும் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மண்டும் கோலின்றி சமநிலை கண்டன.
‘ஜி’ பிரிவில் சாம்பியன்ஸ் லீக் நடப்பு வெற்றியாளர் குழுவான மான்செஸ்டர் சிட்டியும் வெற்றிகண்டது. ஜெர்மனியின் ஆர்பி லைப்ஸிக்கை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது சிட்டி.
‘ஹெச்’ பிரிவில் போர்ச்சுகலின் எஃப்சி போர்ட்டோவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஸ்பெயினின் பார்சிலோனா.