இரு சிங்கப்பூர்த் தேசிய அணிகள், ஒன்று மற்றொன்றை வெள்ளிக்கிழமையன்று வென்று இறுதிச் சுற்றுக்குச் செல்லும்.
முதன்முதலில் சிங்கப்பூரில் நடைபெறும் ஆண்களின் ஆசிய ஓஷியானிய தரைப்பந்துக் கூட்டமைப்பு (ஏஓஎஃப்சி) கிண்ணப் போட்டிகளில் சிங்கப்பூரின் இரண்டு அணிகளும் சிறப்பாகச் செய்துவந்துள்ளன.
எனினும், வெள்ளிக்கிழமை அக்டோபர் 13 இரவு 7 மணிக்கு நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தின் முடிவில் ஓரணியே இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும்.
அக்டோபர் 9 முதல் 14 வரை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் கொரியா, நியூசிலாந்து, மலேசியாவில் இரண்டு அணிகள், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூரின் இரண்டு அணிகளோடு போட்டியிடுகின்றன.
அக்டோபர் 9ஆம் தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் வலுவாக ஆடிய சிங்கப்பூர் ‘ஏ’ அணி, மலேசியா ‘பி’யை 23-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி, கொரியாவை 8-2 என்ற புள்ளிக்கணக்கிலும் பிலிப்பீன்சை 21-0 என்ற புள்ளிக் கணக்கிலும் தோற்கடித்தது.
சிங்கப்பூர் ‘பி’ அணி தன் தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்திடம் 8-6 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது.
எனினும், அதே 8-6 புள்ளிக் கணக்கில் நியூசிலாந்தைத் தோற்கடித்தது. ஆட்டத்தில் 2-5 என பின்தங்கியிருந்த நிலையிலும் கடைசி பகுதியில் ஐந்து புள்ளிகளைப் பெற்று தோல்வியின் பிடியிலிருந்து விடுபட்டு வெற்றியைக் கைப்பற்றியது. கடைசி ஆட்டத்திலும் மலேசியா ‘ஏ’ குழுவை 5-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
சிங்கப்பூர் ‘ஏ’, ‘பி’ அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் https://www.youtube.com/watch?v=Wi302PIGILE இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
போட்டியில் வெல்பவர் இறுதிச் சுற்றில் தாய்லாந்தைச் சந்திப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறுதிச் சுற்று சனிக்கிழமை 6 மணிக்கும் மூன்றாம்-நான்காம் நிலைக்கான போட்டி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கும் நடைபெறும்.
அனைத்து ஏஓஎஃப்சி போட்டிகளையும் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ வளாகத்தில் நேரில் காணலாம். அனுமதி இலவசம். https://www.youtube.com/@face-offsportstv/streams இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பையும் காணலாம்.
கவனிக்கவேண்டிய முக்கிய விளையாட்டாளர்கள்
முக்கிய மோதலாக சிங்கப்பூர் ‘பி’யின் 29 வயது ஆர்.சதீஷ், அவரது அண்ணன் சிங்கப்பூர் ‘ஏ’ அணித் தலைவரான 31 வயது ஆர்.சூரியாவைக் களத்தில் சந்திக்கவுள்ளார்.
சிங்கப்பூர் ‘ஏ’யின் விக்னேசா பசுபதி, 27 விளையாடுவதை அவரது இரட்டைச் சகோதரரும் தேசிய அணியின் துணைத் தலைவருமான குமரேசா பசுபதி பார்த்து உற்சாகப்படுத்தவுள்ளார். காலில் அடிபட்டதால் குமரேசா இப்போட்டியில் பங்குகொள்ளவில்லை.
இவ்வாண்டு ‘ஏஓஎஃப்சி’ கிண்ணப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெறுவதால் சிங்கப்பூர் ‘ஏ’ குழுவின் முஹமது ஹரிஸ், 26, விளையாடுவதை அவரது குடும்பத்தார் நேரில் கண்டு பெருமைப்படுவதாகக் கூறினர். ஹரிஸ் 2021லிருந்து தேசிய அணியில் விளையாடுகிறார்.
தன் முதல் போட்டியில் பங்குபெறும் சிங்கப்பூர் ‘பி’யின் இளங்கேஷ், 27, தன் திறனை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்.
சிங்கப்பூர் ‘பி’ அணித் தலைவர் டாக்டர் இஷ்வார்பால் சிங் கிரவால், 30, தன் அணி வெற்றிக்கு முழு மூச்சுடன் பயிற்சி செய்துவருவதாகக் கூறுகிறார்.