பிரெஞ்சு காற்பந்தில் வன்முறை; பயிற்றுவிப்பாளர் படுகாயம்

பிரெஞ்சு காற்பந்தில் வன்முறை; பயிற்றுவிப்பாளர் படுகாயம்

2 mins read
255fec75-fa46-4913-bba4-acdcc2d38c56
சம்பவத்தைத் தொடர்ந்து மார்செய்க்கும் லியோனுக்கும் இடையிலான லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஸ்டாடி வெலொடுரோம் விளையாட்டரங்கில் அத்தகவல் ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பாரிஸ்: பிரான்சில் மார்செய், லியோன் ஆகிய காற்பந்துக் குழுக்கள் மோதவிருந்த லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்டம் மார்செயின் ஸ்டாடி வெலொடுரோம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்தது. அரங்கிற்கு லியோன் குழுவினர் வந்துகொண்டிருந்த பேருந்து கல்லெறிந்து தாக்கப்பட்டது.

அதில் காயமடைந்த லியோன் பயிற்றுவிப்பாளர் ஃபாபியோ குரோசோவின் முகம் முழுவதும் ரத்தம் வடிந்தபடி காணப்பட்டது. அவருக்கு அவ்வப்போது தலை சுற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குரோசோவின் துணை பயிற்றுவிப்பாளரும் காயமுற்றார்.

தாக்குதலையடுத்து ஆட்டத்தில் பங்கேற்கத் தங்களுக்கு விருப்பமில்லை என்று லியோன் திட்டவட்டமாகக் கூறியது. முடிவெடுக்க அவசரக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆட்டத்தை ஒத்திவைக்க அக்குழு முடிவெடுத்தது.

இந்நிகழ்வு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் மார்செய் தலைவர் பாப்லோ லொங்கோரியா.

லியோன் ரசிகர்கள் இருந்த இன்னொரு பேருந்தும் தாக்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறையினர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். தாக்கப்பட்ட இரு பேருந்துகளிலும் சன்னல்கள் உடைந்துபோயின.

மற்றொரு பிரெஞ்சு லீக் ஆட்டத்தில் பிரெஸ்ட்டை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது லீக்கின் நடப்பு வெற்றியாளரான பிஎஸ்ஜி. நட்சத்திர தாக்குதல் வீரர் கிலியோன் எம்பாப்பே பிஎஸ்ஜிக்கு இரண்டு கோல்களைப் போட்டார்.

2-0 எனும் கோல் கணக்கில் முதலில் பிஎஸ்ஜி முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு பிரெஸ்ட் மீண்டு வந்து கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.

89வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு ஒரு வழியாக பிஎஸ்ஜியை வெல்லச் செய்தார் எம்பாப்பே.

லீக்கில் இதுவரை 10 ஆட்டங்கள் ஆடியிருக்கும் பிஎஸ்ஜி இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே அளவு ஆட்டங்களை விளையாடியுள்ள நீஸ், ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்