பெங்களூரு: இந்தியாவில் நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்டன.
கடைசி இடத்திற்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. மூன்று அணிகளும் 8 புள்ளிகளில் உள்ளன.
இந்நிலையில் பெங்களூரில் வியாழக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு இலங்கை அணியை நியூசிலாந்து எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து நல்ல ஓட்டங்கள் வித்தியாசங்களில் வென்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.
ஆனால் ஆட்டம் நடக்கும் நேரம் கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நியூசிலாந்து-பாகிஸ்தான் விளையாடிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இறுதியில் ‘டிஎல்எஸ்’ முறையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து மழையையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் களமிறங்குகிறது.