புனே: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு புனே விளையாட்டரங்கில் பங்ளாதேஷ் அணியும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டது. அதனால் இந்த ஆட்டத்தை அது பயிற்சி ஆட்டம் போல் எடுத்துக்கொள்ளக்கூடும். அதே நேரம் பங்ளாதேஷ் போட்டியில் இருந்து கடந்த வாரமே வெளியேறியது.
இருப்பினும் இந்த ஆட்டம் பங்ளாதேஷ் அணிக்கு மிக முக்கியமான ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த உலகக் கிண்ணத் தொடர் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ‘சாம்பியன்ஸ் டிராபி’ போட்டிக்கு தகுதிபெறும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன.
கடைசி இரண்டு இடங்களுக்கு இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, பங்ளாதேஷ் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பங்ளாதேஷ் ‘சாம்பியன்ஸ் டிராபி’க்கு தகுதிபெறும் அல்லது அந்த அணி மோசமான தோல்வியைத் தவிர்க்க வேண்டும்.
காயம் காரணமாக அணித் தலைவர் சகிப் அல் ஹாசன் கடைசி ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது பங்ளாதேஷ் அணிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

