வெளிநாட்டு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நிறைவுபெற்றன.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு மத்தியில் 50,000 வெளிநாட்டு ஊழியர்களைச் சென்றடையும் நோக்கத்தில் சிங்டெல், வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் இணைந்து இப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தன.
அக்டோபர் 8ஆம் தேதி கொக்ரேன் பொழுதுபோக்கு நிலையத்தில் தொடங்கிய போட்டிகள், சுங்கை தெங்கா தங்குமிடத்திலும் பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையத்திலும் தொடர்ந்தன.
மூன்று இடங்களிலும் வெற்றிபெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தில் மோதின. பங்ளாதேஷ் விளையாட்டாளர்களைக் கொண்ட ‘தேசி பாய்ஸ்’ அணி வாகைசூடியது.
அவர்கள் $2,000 ரொக்கமும் ‘புரொஜெக்டர்’ திரையரங்கில் பெரிய திரையில் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைக் காணும் வாய்ப்பையும் வென்றனர்.

வெற்றிபெற்ற மற்ற அணிகளுக்குத் தலா $500 ரொக்கமும் வழங்கப்பட்டது.
அதோடு, இப்போட்டிகளில் பங்குபெற்ற மொத்தம் 13 அணிகளுக்கும் $100 உணவகப் பற்றுச்சீட்டும் கிரிக்கெட் விளையாட்டுப் பொருள்களும் வழங்கப்பட்டன.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர்களுக்குப் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை நடத்தியதோடு ‘5ஜி’ மூலம் அவர்கள் பெறும் பயன்களையும் உணர்த்தினோம்,” என்றார் சிங்டெல் கைத்தொலைபேசிச் சந்தைப்படுத்துதல் பிரிவுத் துணைத் தலைவி ஷில்பா அகர்வால்.
இதன்வழி கிடைத்த சிறந்த வரவேற்பினால் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்ட புதிய முயற்சிகளை ஆராயவுள்ளதாகவும் கூறினார்.
போட்டிகளுக்கு மத்தியில் சிங்டெல் கூடங்களும் இடம்பெற்றன. ‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’ சமூக நிறுவனமும் கூடத்தை அமைத்துத் துணைபுரிந்தது.

