அகமதாபாத்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் வெற்றிபெற எல்லா முயற்சிகளையும் எடுத்தோம் என்று இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இறுதியாட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதனால், சொந்த மண்ணில் கிண்ணத்தை வெல்லும் கனவில் இருந்த இந்தியாவின் ஆசை தகர்ந்தது.
“இறுதியாட்டத்தில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், இந்திய அணியை நினைத்துப் பெருமைப்படுகிறேன், போட்டியின் முதல் ஆட்டத்தில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டோம். கடைசி ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை. அது ஏமாற்றம் தருகிறது,” என்று ரோகித் சர்மா ஆட்டம் முடிந்த பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“280 ஓட்டங்கள் குவித்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் அது ஆட்டத்தின் போக்கை மாற்றியது,” என்றார் ரோகித்.
ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு எளிதாக ஓட்டங்கள் குவிக்க விட்டுவிட்டோம். அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டோம்,” என்றும் அவர் சொன்னார்.
சொன்னதைச் செய்த கம்மின்ஸ்
இறுதி ஆட்டம் நடக்கும் விளையாட்டரங்கில் உள்ள 130,000 இந்திய ரசிகர்களை அமைதியாக இருக்க வைப்பதே இலக்கு என்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் கூறியிருந்தார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் பேட் கம்மின்ஸ்.
அதேபோன்று செய்து காட்டினார் கம்மின்ஸ். விராத் கோஹ்லியை 54 ஓட்டங்களில் வெளியேற்றினார் கம்மின்ஸ். கோஹ்லி ஆட்டமிழந்தபின் விளையாட்டரங்கமே மயான அமைதியில் மூழ்கியது. அந்தத் தருணம் தமக்குப் பெருமகிழ்ச்சி தந்ததாக கம்மின்ஸ் குறிப்பிட்டார்.
டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற அனைத்து வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டதால் வெற்றிவாகை சூடியதாக அவர் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்தை வென்று சாதித்துள்ளது.
கோஹ்லி, ஷமி ஆறுதல்
இந்த உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் கோஹ்லி முதலிடம் பிடித்தார்.
அவர் 11 ஆட்டங்களில் விளையாடி 765 ஓட்டங்கள் எடுத்தார். தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முகம்மது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். அவர் 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது.