அபுதாபி: முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லோன் சாமுவெல்சுக்கு ஆறாண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் அறிவித்துள்ளது.
ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதால் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. தடை எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தும்.
42 வயது சாமுவெல்ஸ், 2020ஆம் ஆண்டு எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்றார். எமிரெட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிமுறைத் தொகுப்பில் அவர் நான்கு விதிமுறைகளை மீறியது நிரூபணமானது.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு அபுதாபி டி10 லீக்கில் விளையாடிக் கொண்டிருந்தபோது சாமுவெல்ஸ் விதிமுறைகளை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை செயல்பாட்டுக்கு வந்தது.

