கெளஹாத்தி: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் போட்டியிடும் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்தது.
தொடரின் முதல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா, இந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி பந்தில் வெற்றி இலக்கை அடைந்தது ஆஸ்திரேலியா.
முதலில் பந்தடித்த இந்தியா மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை எடுத்தது. இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்தார்.
அவர் 123 ஓட்டங்களைக் குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கெய்க்வாட்.
அதற்குப் பிறகு பந்தடித்த ஆஸ்திரேலியாவுக்கு கிளன் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ஓட்டங்களை விளாசினார். அவர் எடுத்த ஓட்டங்களில் எட்டு பவுண்டரிகளும் எட்டு சிக்சர்களும் அடங்கும்.
டி20 கிரிக்கெட்டில் ஆக வேகமாக சதமடித்த இரண்டு வீரர்களில் ஒருவராக மேக்ஸ்வெல் திகழ்கிறார்.
20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ஓட்டங்களை எடுத்தது ஆஸ்திரேலியா.
இதையடுத்து இத்தொடரில் இந்தியா 2-1 எனும் ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இத்தொடரில் வாகை சூடும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தை வெல்வது கட்டாயமாக இருந்தது. மேக்ஸ்வெல்லின் உற்சாகமூட்டும் விளையாட்டின் மூலம் ஆஸ்திரேலியா மீண்டு வந்தது.
தொடரில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் இரு அணிகளும் சற்று அனுபவம் குறைந்த விளையாட்டாளர்களைக் களமிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.