இஸ்தான்புல்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.
துருக்கியின் கலட்டாசரே குழுவுக்கு எதிரான ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் யுனைடெட் இரு முறை இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னணி வகித்தபோதும் இறுதி கோல் எண்ணிக்கை 3-3ஆக இருந்தது.
ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களுக்குள் அபாரமாக விளையாடி 2-0 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றது யுனைடெட். பின்னர் கலட்டசராய் ஒரு கோல் போட்டது.
பிற்பாதியாட்டத்தில் யுனைடெட் மீண்டும் இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னுக்குச் சென்றது. ஆனால் கவனக்குறைவு காரணமாக அக்குழு இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்தது.
கலட்டாசரேயின் மூன்று கோல்களில் இரண்டைப் போட்டவர் முன்னாள் செல்சி வீரர் ஹக்கிம் ஸியெஷ்.
தாக்குதல் ஆட்டத்தில் இரு குழுக்களும் சிறப்பாக விளையாடின. ஆனால் இரண்டுக்குமே தற்காப்பு ஆட்டம் சீராக இல்லை.
யுனைடெட் கோல்காப்பாளர் ஆண்ட்ரே ஒனானா செய்த தவறுகளால் கலட்டாசரே இரண்டு கோல்களைப் போட்டது.
‘ஏ’ பிரிவில் உள்ள நான்கு குழுக்களுக்கும் ஓராட்டம் எஞ்சியுள்ளன. கடைசி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிவரும் பயர்ன் மியூனிக்கை வென்று கலட்டாசரேவும் கோப்பன்ஹேகனும் மோதும் ஆட்டம் சமநிலையில் முடிந்தால் மட்டுமே யுனைடெட் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறும்.