மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் செல்சியும் சந்திக்கவுள்ளன.
தற்போது சிரமப்பட்டுவரும் மான்செஸ்டர் யுனைடெட் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட்டிடம் தோல்வியடைந்தது.
அந்த ஆட்டத்துக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் படிப்படியாக மீண்டு வருவதுபோல் தென்பட்டது. ஆனால் அந்தத் தோல்வியைத் தொடர்ந்து அக்குழு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
மாறாக செல்சி இந்த ஆட்டத்தில் எப்படி விளையாடும் என்பதை கணிப்பது சிரமமாக உள்ளது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற செல்சி, மான்செஸ்டர் சிட்டியுடன் 4-4 எனும் கோல் கணக்கில் அபாரமான முறையில் சமநிலை கண்டது.
சென்ற லீக் ஆட்டத்தில் ஒரு விளையாட்டாளருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட பிறகு பிரைட்டனை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது செல்சி. ஆனால் இதே செல்சி அண்மையில் நியூகாசலிடம் 4-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்டது.
எனினும், சிட்டிக்கு முட்டுக்கட்டையாக இருந்த செல்சி, பெருமூச்சு விட ஏங்கும் யுனைடெட்டுக்குப் பெரும் சவாலாக இருந்தால் ஆச்சரியம் இல்லை. யுனைடெட் இப்பருவம் பெரிய குழுக்களுக்கு எதிராக சோபிக்கவில்லை.
இவ்விரு குழுக்களும் சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை காலை 4.15 மணிக்கு மோதவுள்ளன.

