புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இந்தியாவின் வெற்றி இலக்கு 117 ஓட்டங்களாக இருந்தது. 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது இந்தியா.
அந்த அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் 52 ஓட்டங்களை எடுத்தார். முதன்முறையாக இந்திய அணிக்குக் களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.
அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் சுதர்சன்.
“எல்லாரையும் போல் சிறு வயதில் இந்தியாவுக்கு விளையாடுவது எனது கனவாக இருந்தது.
“கடின உழைப்பும் மனவுறுதியும் இருந்தால் கனவுகள் நனவாகும். நாட்டைப் பிரதிநிதித்து அணிக்குப் பங்காற்றுவதை வரமாக எண்ணுகிறேன். பல நினைவுகளைக் குவிக்கக் காத்துக்கொண்டிருக்கிறேன்,” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார் சுதர்சன்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இத்தொடரில் 1-0 என முன்னணி வகிக்கிறது. இந்தியா.