பாரிஸ்: லீக் குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி (கிளப் வோர்ல்ட் கப்) 2025ஆம் ஆண்டு முதல் புதிய வடிவில் இடம்பெறவுள்ளது.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் இதனை உறுதிப்படுத்தியது.
தற்போது அப்போட்டியில் ஏழு குழுக்கள் போட்டியிடுகின்றன. 2025ஆம் ஆண்டு முதல் 32 குழுக்கள் போட்டியிடும்.
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுப் போட்டிக்குப் பிறகு மாற்றங்கள் நடப்புக்கு வரும்.
மேலும், 2025 முதல் குழு உலகக் கிண்ணப் போட்டி நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஓஷனியா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த ஆகச் சிறந்த குழுக்கள் போட்டியில் இடம்பெறும். கண்டங்களுக்கான காற்பந்துப் போட்டிகளில் வாகை சூடும் குழுக்கள் குழு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும்.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லும் குழுக்களுக்கு அடுத்தபடியாக ஆகச் சிறப்பாக விளையாடுபவை தகுதிபெறும். அந்த வகையில் 2022, 2023ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயினின் ரியால் மட்ரிட், இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி ஆகியவை போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டன.
ஐரோப்பாவிலிருந்து 12 குழுக்கள் போட்டியில் இடம்பெறும். புதிய குழு உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்காவில் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறும்.