போர்ட் எலிசபெத்: தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் சாய் சுதர்சன்.
இப்போட்டியில் 62 ஓட்டங்களை எடுத்த அவர், தொடரின் முதல் போட்டியில்தான் முதன்முறையாக இந்தியாவுக்குக் களமிறங்கினார். அந்த ஆட்டத்திலும் அரை சதம் அடித்திருந்தார்.
அவரின் திறமையையும் ஆற்றலையும் கண்டு வியந்திருக்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். தான் எடுத்த 60 ஓட்டங்களை சுதர்சன் சதமாக மாற்றவேண்டும் என்று கவாஸ்கர் ஊக்கமூட்டினார்.
“இதனைத் தொடர்ந்து மேம்படவேண்டும், இதில் திருப்தியடைந்து விடக்கூடாது. அவர் நிச்சயமாக திருப்தியடையமாட்டார் என்று நான் நம்புகிறேன். 50, 60 ஓட்டங்களை எடுத்து வெளியேறக்கூடாது. போட்டியில் முதலில் களமிறங்கும் பந்தடிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஒவ்வொரு முறையும் சதமடிக்க வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தொடக்கத்தில் களமிறங்கும் பந்தடிப்பாளர்களில் ஒருவரான சாய் சுதர்சனுடன் யார் இணையாக இருப்பார் என்பதே பலரால் பேசப்படும் ஒன்றாக இருக்கும்,” என்றார் கவாஸ்கர்.
சுதர்சன் சிறப்பாக விளையாடியபோதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டியில் தோல்விகண்டது இந்தியா. எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது.
இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இப்போட்டியை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா ஆட்டக் கணக்கை சமப்படுத்தியது.
முதலில் பந்தடித்த இந்தியா 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை எடுத்தது. சுதர்சனுக்கு அடுத்தபடியாக ஆக அதிக ஓட்டங்களை எடுத்தார் இந்தியாவின் கேஎல் ராகுல்.
தென்னாப்பிரிக்காவின் வெற்றி இலக்கு 212 ஓட்டங்களாக இருந்தது.
42.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்களைக் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது தென்னாப்பிரிக்கா.