லிவர்பூல்: வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான கரபாவ் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் 5-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் அபார வெற்றிகண்டது.
லிவர்பூலின் டொமினிக் ஷொபொஸ்லாய், கொடி காக்போ, முகம்மது சாலா ஆகியோர் ஆளுக்கு ஒரு கோல் போட்டனர். இரண்டு கோல்களைப் போட்டார் கர்ட்டிஸ் ஜோன்ஸ். வெஸ்ட் ஹேமுக்கு ஜேரட் போவன் கோல் போட்டார்.
அரையிறுதியாட்டத்தில் லிவர்பூல், ஃபுல்ஹமைச் சந்திக்கும்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் லிவர்பூல் ரசிகர்கள்மீது அதிருப்தியடைந்தார் அக்குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப். ஆட்டத்தில் லிவர்பூல் ரசிகர்கள் போதுமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை என்பது கிளோப்பின் கருத்து.
“நான் என்றுமே லிவர்பூல் ரசிகர்களைப் பாராட்டியிருக்கிறேன். 60, 70 ஆண்டுகளில் முதன்முறையாக இன்றுதான் இத்தனை பேர் திரண்டனர். ஆனால், ரசிகர்கள் இதுவரை இல்லாத வகையில் ஆக அமைதியாகவும் இருந்தனர்,” என்று வருத்தம் தெரிவித்தார் கிளோப்.
சனிக்கிழமையன்று ஆன்ஃபீல்டில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஆர்சனலைச் சந்திக்கவுள்ளது லிவர்பூல்.
“நீங்கள் சரியான மனநிலையில் இல்லாவிட்டால் உங்களின் நுழைவுச்சீட்டை வேறு ஒருவரிடம் கொடுத்துவிடுங்கள்,” என்று கிளோப் ரசிகர்களை சாடினார்.