‘டர்ஃப் சிட்டி’யில் இறுதிமுறையாக நடைபெற்ற சிங்கப்பூர் உள்ளரங்க கிரிக்கெட் சங்கப் (ஐசிஏ) போட்டிகளின் நான்காவது பருவம் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு நிறைவை நாடியது.
இவ்வாண்டு இறுதியில் சிங்கப்பூர் நில ஆணையம், ‘டர்ஃப் சிட்டி’ நிலத்தை மீட்டுக்கொள்ளவிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கடுமையான இறுதிப் போட்டியில் 6:1 எனும் புள்ளிக்கணக்கில் ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணி, ‘பிட்சர்ஸ்’ அணியை வென்றது.
முதலில் பந்தாடிய ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணி, 94 ஓட்டங்களைக் குவித்தது.
இரண்டாவதாகப் பந்தடித்த ‘பிட்சர்ஸ்’ அணி விறுவிறுப்பாக முதல் நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்கள் எடுத்தாலும் அதன் பின்பு தாக்குப்பிடிக்க முடியாமல் மொத்தம் 67 ஓட்டங்களே எடுத்தது.
ஆட்ட நாயகராக ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணியின் தலைவர் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். “இந்த தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணம், எங்கள் அணியினரின் கடுமையான உழைப்பும் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையும் உறுதியான நட்புமே,” என்றார் அவர்.
இப்போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றுமுறை ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணி வெற்றி பெற்றது இதுவே முதல்முறை.
மூன்றாம் நிலையை ‘ஷாரிஃப்கமீன்8’ அணி பிடித்தது.
அக்டோபரிலிருந்து பன்னிரண்டு அணிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடிவந்துள்ளன. நடுவில் இரண்டு அணிகள் விலகிக்கொண்டதால் பத்து அணிகளே எஞ்சின.
குழு ஆட்டங்களின் நிறைவில் முதல் நிலையில் ‘பிட்சர்ஸ்’, இரண்டாவது நிலையில் ‘ஷாரிஃப்கமீன்8’, மூன்றாவது நிலையில் ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’, நான்காவது நிலையில் ‘கவாலியர்ஸ்’ அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன.
அரையிறுதியில் ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணி ‘ஷாரிஃப் கமீன்8’ அணியை 6:1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தது.
அனைத்துப் போட்டிகளின் தலைசிறந்த விளையாட்டாளராக ‘ஷாரிஃப்கமீன்8’ன் தீபக் ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘டர்ஃப் சிட்டி உள்ளரங்கத் திடலை விட்டு வெளியேறுவது ஒரு பெரிய இழப்பு’
‘டர்ஃப் சிட்டி’ விளையாட்டுத் திடல்தான் தென்கிழக்காசியா, வடகிழக்காசியாவில் உள்ள ஒரே அனைத்துலகத் தரம்வாய்ந்த திடல் என்றும் அதிலிருந்து வெளியேற நேர்ந்ததைப் பெரும் இழப்பாகக் கருதுவதாகவும் கூறினார் ‘ஐசிஏ’ தலைவர் முரளி.
எனினும், இனி உள்ளரங்கக் கிரிக்கெட் போட்டிகள் ‘ஸ்போர்ட்டிகோ’ விளையாட்டுத் திடலில் தொடரும் என அவர் உறுதியளித்தார்.
“கோவனில் உள்ள ‘ஸ்போர்ட்டிகோ’ திடலை மேலும் சுலபமாக அணுக முடிவதால் கூடுதல் ஈரணிகள் போட்டிகளில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளன,” என நிலைமையால் விளைந்த நன்மையைச் சுட்டினார் திரு முரளி.
இனி தொடர்ந்து அனைத்துலகத் தரம்வாய்ந்த உள்ளரங்கக் கிரிக்கெட் திடல்களை அமைக்க ஏதுவான இடங்களைத் தேடவிருப்பதாகக் கூறினார் திரு முரளி.