சாவ் பாவ்லோ: பிரேசில் அணியின் தற்போதைய நிலையைப் பார்த்து அந்நாட்டின் மறைந்த காற்பந்து நட்சத்திரம் பெலே வருத்தப்பட்டிருப்பார் என்று அவரின் மகன் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (29 டிசம்பர்) பெலே மறைந்து ஓராண்டு நிறைவடைகிறது. அதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற நேர்காணலில் அவரின் மகன் எடின்யோ இவ்வாறு சொன்னார்.
இதுவரை விளையாடிய 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதியாட்டங்கள் ஆறில் மூன்றில் தோல்வியடைந்தது பிரேசில்.
“நாம் சரிவை எதிர்கொண்டு வருகிறோம். இன்றும் நம்மிடம் மிகச் சிறப்பான விளையாட்டாளர்கள் இருக்கின்றனர். ஆனால் முன்பு இப்போது இருப்பதைவிட உயர்தர விளையாட்டாளர்கள் இருந்தனர்.
“இந்த ஆண்டு பெலே உயிருடன் இருந்திருந்தால் அவர் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை,” என்று கூறினார் எடின்யோ.
பிரேசில், ஆண்கள் காற்பந்து உலகக் கண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள அணி. ஐந்து முறை கிண்ணத்தை வென்றிருக்கும் அது, 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகை சூடவில்லை.