மிடல்ஸ்பரோ: இங்கிலாந்தின் கரபாவ் கிண்ணப் போட்டியில் அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லிக் குழுவான செல்சி, எதிர்பாரா விதமாக தோல்வியடைந்தது.
அரையிறுதிச் சுற்றில் இரு குழுக்களும் தங்களின் சொந்த மண்ணிலும் எதிர்க்குழுவின் அரங்கிலும் விளையாடும். இரு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு தீர்மானிக்கப்படும்.
மிடல்ஸ்பரோவின் சொந்த அரங்கான ரிவர்சைடில் சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சாம்பியன்ஷிப் எனும் லீக்கில் போட்டியிடும் மிடல்ஸ்பரோ 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
இங்கிலாந்து காற்பந்தில் சாம்பியன்ஷிப், பிரிமியர் லீக்குக்கு அடுத்த நிலையில் இருக்கும் லீக் ஆகும்.
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் பரோவின் ஹேடன் ஹேக்னி கோல் போட்டார்.
தனது குழு கிடைத்த கோல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார் செல்சி நிர்வாகி மொரிச்சியோ பொக்கட்டினோ.
“ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நாங்கள்தான் சிறப்பாக விளையாடினோம். நல்ல கோல் வாய்ப்புகளும் எங்களுக்குக் கிடைத்தன.
ஆனால் கோல் போடத் தவறினோம், வாய்ப்புளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை,” என்றார் பொக்கட்டினோ. “இப்பருவம் அடிக்கடி இப்படி நடந்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பருவத்தில் எதிர்க்குழுக்களிள் திடலில் விளையாடிய கடந்த ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது செல்சி.