சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா ஆக அதிக அனைத்துலக டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் வியாழக்கிழமை நடந்த போட்டியின்போது அவர் இப்பெருமையைப் பெற்றார். அது அவருக்கு 149வது அனைத்துலக டி20 போட்டி.
அந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை எடுத்தது.
அதன்பின் பந்தடித்த இந்திய அணி 17.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டியது. 40 பந்துகளில் 60 ஓட்டங்களை விளாசிய சிவம் துபே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் நடக்கிறது.