ரோம்: இத்தாலியக் காற்பந்துக் குழுவான ஏஸ் ரோமாவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியின் ‘செரி ஆ’ லீக்கில் போட்டியிடும் ரோமா செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 16) இச்செய்தியை வெளியிட்டது.
“ஜோசே மொரின்யோவும் அவருடன் இணைந்து பணியாற்றியோரும் உடனடியாக குழுவிலிருந்து வெளியேறுவர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அறிக்கை ஒன்றில் ரோமா குறிப்பிட்டது. புதிய நிர்வாகியாக முன்னாள் ரோமா வீரர் டேனியெலா டி ரொசி நியமிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
‘செரி ஆ’ லீக் பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது ரோமா.
60 வயது மொரின்யோ, போர்ட்டோ, செல்சி, மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட், இன்டர் மிலான் உள்ளிட்ட ஐரோப்பாவின் முன்னணி குழுக்களின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். 2021ஆம் அண்டு மே மாதம் அவர் ரோமாவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
சென்ற பருவம் ரோமாவை யூரோப்பா லீக் போட்டியின் இறுதியாட்டத்துக்கு முன்னேறச் செய்தார். அதில் பெனால்டிகளில் ஸ்பெயினின் செவியாவிடம் தோல்வியடைந்தது ரோமா.
கடந்த ஆறு லீக் ஆட்டங்களில் ரோமா, ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மொரின்யோ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.