பார்சிலோனா: தனது குழுவினர் தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளார் பார்சிலோனா காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஸாவி ஹெர்னாண்டஸ்.
சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிட்டம் 4-1 எனும் கோல் கணக்கில் மோசமாகத் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று (ஜனவரி 17) ஸாவி இவ்வாறு அறிவித்தார்.
“எனது விளையாட்டாளர்கள் என் மீது நம்பிக்கை இழக்கும் நாள் வரும்போது நான் பதவி விலகுவேன்,” என்றார் முன்னாள் பார்சிலோனா அணித்தலைவருமான 43 வயது ஸாவி.
இந்தப் பருவம் தற்காப்பு ஆட்டத்தில் பார்சிலோனா பெரிதும் சிரமப்பட்டுள்ளது. லா லீகா லீக்கில் அக்குழு இதுவரை 22 கோல்களை விட்டுக்கொடுத்துவிட்டது.
சென்ற பருவம் முழுவதும் 20 கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது பார்சிலோனா.
பிரச்சினைகளைத் தன்னால் சரிசெய்ய முடியும் என்று ஸாவி இன்னமும் நம்புகிறார். ஆனால் ஒருவேளை நிலைமை சீராகாவிட்டால் அவர் பதவி விலகவும் தயாராய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.