ரோம்: இத்தாலியின் செரி-ஆ காற்பந்து லீக் குழுவான ஏஎஸ் ரோமாவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் டேனியல் டி ரோசிக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிட்டியுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டமொன்றில் அவரது குழு, ஹெல்லாஸ் வெரோனா குழுவை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் ரோமாவின் ரோமெலு லுக்காக்கு அதன் முதல் கோலைப் போட்டார். ஆறு நிமிடம் கழித்து அக்குழுவின் லோரென்சோ பெலிகிரினி அதன் இரண்டாவது கோலைப் போட்டார்.
ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் வெரோனா குழுவின் மைக்கல் ஃபோலோருன்ஷோ ஒரு கோல் போட்டு கோல் எண்ணிக்கையை 2-1 என்று குறைத்தார்.
இந்த வெற்றி ரோமாவின் ரசிகர்களைக் குதூகலப்படுத்தியுள்ளது. அக்குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ கடந்த வாரத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் ரோமா இப்போது 32 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.