டோஹா: ஆசிய கண்டத்தின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஈரான்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஈரானும் சிரியாவும் மோதிய ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. 34வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மெஹ்டி டரேமி ஈரானை முன்னுக்கு அனுப்பினார்.
64வது நிமிடத்தில் சிரியாவுக்கும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கினார் ஒமார் கிரிபின்.
90வது நிமிடம் தாண்டிய பிறகு தப்பாட்டம் காரணமாக ஈரானின் டரேமி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு நீக்கப்பட்டார்.
கூடுதல் நேரத்துக்குப் பிறகும் கோல் எண்ணிக்கை சமமாக இருந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிகள் வரை சென்றது. பெனால்டிகளில் 5-3 எனும் கோல் கணக்கில் ஈரான் காலிறுதிக்கு முன்னேறியது.
கூடுதல் நேரத்தில் ஒரு விளையாட்டாளர் குறைவாக இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது ஈரான்; காலிறுதியில் தங்கள் அணி கூடுதல் ஒற்றுமையுடன் இருக்கும் என்று ஈரான் நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பஹ்ரேனை 3-1 எனும் கோல் கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான்.

