விசாகப்பட்டினம்: முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்துள்ளார் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பந்தடித்தது. 22 வயது ஜெய்ஸ்வால் அப்போட்டியில் 209 ஓட்டங்களைக் குவித்தார்.
200 ஓட்டங்களைத் தாண்டியவுடன் தனது தலைக்கவசத்தைக் கழற்றி திடலில் இன்பத்தில் குதித்துக் கொண்டாடினார் ஜெய்ஸ்வால். அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு அவர் காற்றில் முத்தங்களை வழங்கினார்.
ரசிகர்கள் கைதட்டி ஜெய்ஸ்வாலை ஊக்குவித்தனர்.
ஜெய்ஸ்வால் 209 ஓட்டங்களைக் குவித்த பிறகு இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒருவழியாக அவரை வெளியேற்றினார்.
ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் பந்தடித்த இந்தியா 396 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடரில் 1-0 எனும் ஆட்டக் கணக்கில் முன்னணி வகிக்கிறது இங்கிலாந்து.